Saturday, November 06, 2010

இருவினை சேரா இறைவன்

இருவினை சேரா இறைவன்!

(தமிழ் ஆசிரியரும், அவரது மாணாக்கரும் உரையாடுவது போல் இக்கட்டுரை அமைகிறது.)

(ஒரு ஞாயிறு காலை நேரம்)

மாணவன்: ஐயா, காலை வணக்கம்!

ஆசிரியர்: காலை வணக்கம். என்ன இவ்வளவு தூரம் தம்பி?

மாணவன்: ஐயா, தங்களிடம் உரையாடலாம் என்று வந்தேன். இன்று விடுமுறையாதலால் தங்களிடம் சில சந்தேகங்களை கேட்டு தெரிந்துக் கொள்ளலாம் நினைத்தேன். தங்களிடம் முன்னேமே சொல்லாமல் வந்ததற்கு மன்னிக்கவும்.

ஆசிரியர்: பரவாயில்லை தம்பி. இன்று எனக்கு முக்கியமான வேலை எதுவுமில்லை. சரி! உன் சந்தேகங்களைக் கேள்?

மாணவன்: திருக்குறள் படித்துக் கொண்டிருந்தேன். கடவுள் வாழ்த்தில் வரும் ”இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்” என்ற சொற்றொடர் எனக்கு விளங்கவில்லை. எல்லாம் வல்ல இறைவனுக்கு வினைகள் எப்படியிருக்க முடியும்? சிவபெருமான், பிறவாயாக்கை பெரியவன் என்று படித்திருக்கிறேன். ஆனால், திருவள்ளுவர் இருவினை சேரா இறைவன் என்கிறார்? நீங்கள் தான் விளக்க வேண்டும் ஐயா?

ஆசிரியர்: தம்பி, அந்த குறளின் பொருள் புரியவேண்டும் என்றால் வினைப் பற்றி நாம் அறிந்துக்கொள்ள வேண்டியது அவசியம்.

மாணவன்: வினையா? தாங்கள் ஊழ்வினையைச் சொல்கிறீர்கள் என்று நினைக்கிறேன்!

ஆசிரியர்: நீ நினைப்பது சரிதான். முதலில் இந்தப் பாட்டைக் கேள்!

“பல்லாவுள் உய்த்து விடினும் குழக்கன்று
வல்லதாம் தாய்நாடிக் கோடலைத் – தொல்லைப்
பழவினையும் அன்ன தகைத்தேதற் செய்த
கிழவனை நாடிக் கொளற்கு”
1

நாலடி என்ன சொல்கிறது?

ஒரு கன்றுக்குட்டி பல பசுக்கள் உள்ள கூட்டத்தில் தன் தாய் பசுவைத் தேடி எவ்வாறு சென்றறடைகிறதோ அதுபோல ஒருவன் செய்த வினைகள் அவன் பல பிறப்பெடுத்தாலும் அவனை சென்றடையும். வினை செய்தவன் அவ்வினைப் பயனை அனுபவித்தே தீரவேண்டும் என்பது பாடம்.

மாணவன் குறுக்கிட்டு: இதனால் தான், திருவள்ளுவர், “பிறர்க் இன்னா முறபகல் செய்யின் தமக் இன்னா பிற்பகல் தாமே வரும்”2 என்றது இதனால் தானோ?

அப்படி என்றால் நாம் அவ்வினைப் பயனிலிருந்து தப்பிக்க முடியாதா? சம்பந்தர் தன் தேவாரத்தில் “நாளும், கோளும் என்ன செய்யும்” நம்பிரான் இருக்கையிலே”3 என்று சொல்கிறாரே?

ஆசிரியர்: அவசரப்படாதே தம்பி. நான் இன்னும் முடிக்கவில்லை. பிறப்பு என்பது சக்கரம் போன்றது. வினை என்ற மாசு விடுபடும் வரை பிறவிச் சுழற்சி நிற்பதில்லை. நமக்கு நடக்கும் நல்லது, கெட்டது எல்லாம் நம் வினைப் பயன்களேக் காரணம். நமக்கு நடக்கும் நன்மைகளுக்கு நம் நல்வினையும், தீமைகளுக்கு தீவினையும் காரணங்களாக அமைகின்றன. இதனால் நல்வினை, தீயவினை என்ற இரண்டு வினைகள் இருப்பது தெரியவரும். இதனால் தேவர் பெருமான் இருவினை என்றார்.

மாணவன்: ஏதோ தத்துவக் கோட்பாடுபோல் தெரிகிறதே? இது எந்த சமயக் கோட்பாடு? சைவமா? வைணவமா?

ஆசிரியர்: (சிரித்தபடியே) நன்று கேட்டாய் தம்பி. இது வைணவமோ, சைவமோ அல்ல. இது சமணக் கோட்பாடு!

மாணவன்: (ஆச்சரியமாக) சமணமா? மயிலை.சீனி.வேங்கடசாமி, திரு.வி.க போன்றவர்கள் குறள் சமணச் சார்புடையது என்கிறார்களே? இதனால் தானோ?

ஆசிரியர்: இருக்கலாம். ஆனால் நாம் அவர்கள் சொல்வதை இங்கு கருத்தில் கொள்ளவேண்டாம். நாமே விளங்கிக் கொள்ளப் பார்ப்போம்!

மாணவன்: ஆனால், சைவத்திலும் வினைக்கோட்பாடுண்டே?

ஆசிரியர்: பொறு! அவசரப்படாதே! சைவத்திலும் வினைப்பற்றி கூறப்பட்டிருந்தாலும்,சிறப்பாக இது சமணத்திற்கே உரிய கோட்பாடு. சமணம் குன்றியக் காலத்தில் இக்கருத்து சைவத்தில் உள்வாங்கப்பட்டது. தேவாரக் காலத்திற்கு முன் சைவத்தில் வினைக் கோட்பாடு இருந்ததாகச் சான்றுகள் இல்லை. பதின்மூன்றாம் நூற்றாண்டு வாக்கில்தான் சைவ கோட்பாடுகள் தொகுத்து எழுதப்பட்டன.4

மாணவன்: அப்படியா? சைவம் தேவாரக் காலத்திற்கு முன்னர் இல்லையா?

ஆசிரியர்: நான் அப்படி சொல்லவில்லையே! சிவன் வழிபாடு இருந்திருக்கிறது. ஆனால் அவை முழுச் சமயமாக பரிணமிக்கவில்லை. கோட்பாடுகள், ஆகமங்கள், வழிபாடு போன்ற கூறுகள் கொண்ட அமைப்பைத் தான் சமயம் என்று கொள்ள முடியும்! இல்லையா?

மேலும், வினைக்கொள்கையில், சைவத்திற்கும், சமணத்திற்கும் ஒரு முக்கிய வேறுபாடு இருக்கிறது. சைவத்தில் சிவபெருமான் தன் ஆணையால் உயிர்களின் வினைப்பயனுக்கு ஏற்ப பிறவி பேதத்தை தருவான் என நம்பப்படுகிறது.5
ஆனால் இதற்கு மாறாக, சமணத்தில் வினைகளை மட்டுறுத்தவென்று யாரும் தேவையில்லை. வினைப்பயன், செய்தவனைத் தானே சென்றடையும். மேலே சொன்ன நாலடியார் பாடல் கூறுவதும் அதுதான். தேவர் பெருமானும் “பிற்பகல் தாமே” என்று கூறுவதால், இங்கே கூறப்படுவதுச் சமண கோட்பாடாகிறது. என்ன புரிகிறதா?

மாணவன்: புரிந்த மாதிரியும் இருக்கிறது. புரியாத மாதிரியும் இருக்கிறது.

((இருவரும் சிரிக்கிறார்கள்)

ஐயா! என்னால் ஒரு முடிவுக்கு வரமுடியவில்லை. இருள்சேர் என்று எதனால்?

ஆசிரியர்: நல்வினை, தீவினை பிறப்பிற்கு வித்தாகும். நால்வகை பிறப்புக்கு வழிவகுக்கும். நல்வினைப் பயனால் மனிதப் பிறப்பும், நல்ல குடியும், தேவகதியும், தீவினைப் பயனால் மிருககதியும், நரககதியும் அமையும். பிறப்பறுக்க இந்த இரண்டு வினைகளையும் நீக்க வேண்டும். இவை இரண்டும் பிறப்பிற்கு காரணமாக அமைவதால் தேவர் பெருமான் “இருள்சேர் இருவினை” என்றார்.

தீவினை, நல்வினை என்று கூறப்படும் இரண்டு வினைகளும் சேராது, மெய்ப் பொருளாய் விளங்கும் இறைவன் புகழை விரும்பிப் போற்றுபவர்களுக்கு.” என்பது அக்குறளின் கருத்து.

மாணவன்: ஐயா, இந்த இடத்தில் ஒரு கேள்வி. இறைவன் புகழைப் போற்றுபவர்களுக்கு இருவினைகளும் சேராது என்றால்? அதா இறைவன் நாமத்தை துதித்து வந்தால் வினைகள் சேராது என்று பொருள் கொள்ளலாமா?

ஆசிரியர்: தம்பி, மேலோட்டமாய்ப் பார்த்தால் அவ்வாறு பொருள் கொள்ளலாம். திருக்குறள் உலகோர் எல்லாருக்கும் பொது. ஒரு சாராருக்கு மட்டும் குறள் எழுதப்படவில்லை. குறளாசிரியர் சமணராகயிருந்தாலும் எல்லாரும் ஏற்றுக் கொள்ளும் வகையில்தான் குறள் யாத்திருக்கிறார்.

வென்றான் வினையின் தொகையாகி விரிந்து தன்கண்
ஒன்றாய்ப் பரந்த உணர்வின் ஒழியாது முற்றும்
சென்றான் திகழும்சுடர் சூழோளி மூர்த்தி யாகி
நின்றான் அடிக்கீழ் பணிந்தார் வினை நீங்கி நின்றார்
”6

”அடிக்கீழ் பணிந்தார் வினை நீங்கி நின்றார்” என்பதனால் இறைவனை வணங்கினாலே வினை நீங்கிவிடும் என்று பொருள் கொள்ளமுடியுமா?

இறைவன் புகழைப் பாடுகின்றவர்கள், இவ்வாறு எல்லாக் கர்மங்களையும் கெடுத்து, ஆன்மாவின் முழுமையான தூய தன்மையை இறுதியில் அடைகின்றனர். சமண சமயக் கருத்துப்படி இவ்வுலக நன்மைகளைப் பெறுவது இறைவனை வணங்குவோரின் கொள்கையன்று. ஆனால், ஆன்மாவின் இயல்பான தூய்மை நிலையைப் பெற்று, தான் வணங்கும் இறைவனைப் போலவே ஆக வேண்டும் என்பதைத்தான் சமண சமயம் வற்புறுத்துகிறது. சமணம் வற்புறுத்தும் இந்தச் சமய நெறி முறை உலகெங்கும் காணப்படும் சமய கண்ணோட்டங்களில் இருந்து வேறுபாடு உடையதாக இருக்கிறது.
ஒருவன் இறைவன் மூலம் அடையும் நன்மைகளுக்குப் பிரதிபலனாகப் படையல்கள் (காணிக்கைகள்) உருவில் அக்கடவுளுக்கு அளிக்கப்படும் வணக்கத்துடன் தொடர்புடையதாக இருக்கிறது. மற்ற உலக சமயங்களின் கண்ணோட்டம் (அதாவது, கடவுள் அருளும் வரங்கள் மூலம் ஒருவன் நன்மையைப் பெறுகிறான், அவ்வாறு பெறும் நன்மைக்குப் பிரதி உபகாரமாக (கைம்மாறு) அவன் படையல்கள் மூலம் வணங்குகிறான்)
இறைவனிடம் இருந்து ஒன்றைப் பெற்று, அதற்கு ஈடாக வேறொன்றைக் காணிக்கை மூலம் அவருக்குத் திருப்பித் தரும் வாணிக பேரம் (அறவிலை) போல் தோன்றும் இந்தக் கருத்தைச் சமண சமயம் ஏற்றுக் கொள்ளவில்லை. உண்மையைக் கூற வேண்டுமானால் விலக்க வேண்டிய மூன்று மூட நம்பிக்கைகளில் (தேவ மூடம், பாஷாண்ட மூடம், உலக மூடம்) இதுவும் ஒன்று. இறைவன் என்று வணங்கப்படும் மெய்ப் பொருள், ஒருவர் தம் ஆன்மாவை உயர்த்திக் கொள்ள – தம் பண்பில் மேம்பாடு அடைய வேண்டிய குறிக்கோளாக இருக்க வேண்டுமேயன்றி, வணங்குபவர் (பக்தர்) பேரம் பேசுபவராக இருக்கக் கூடாது. இதுவே சமணரின் கடவுட் கொள்கை; வழிப்பாட்டின் நோக்கம்
”7

என்று சமண அறிஞர், பேராசிரியர் ஜெ.ஸ்ரீசந்திரன் கூறுவதை இங்கு எண்ணிப் பார்க்க வேண்டியது அவசியம்.

மாணவன்: ஐயா! தங்கள் விளக்கம் என் மனக் கண்ணை திறந்திருக்கிறது. இறைவன் பற்றிய புரிதல் இன்னும் ஆழமாகிறது. திருப்பதியில் ஏன் அவ்வளவுக் கூட்டம்?

ஆசிரியர்: இது அவர்களின் நம்பிக்கை. இதை நாம் குறைக் கூறுதல் ஆகாது. நம் நம்பிக்கை நம்வரையில் இருக்கவேண்டும்.

மாணவன்: ஐயா, இருவினைப் பற்றி சமண இலக்கியங்களில் இருந்து மேலும் விளக்க முடியுமா?

ஆசிரியர்: குறள் கடவுள் வாழ்த்தில் வரும் சொற்றொடர்களும், கருத்துகளும் மற்ற சமய இலக்கியங்களைவிட சமண இலக்கியங்களில் பெரிதும் பயின்று வருகிறது. அவ்வளவையும் இங்கு கூற ஒரு நாள் போதாது, ஆகையால் சிலவற்றை மற்றும் இங்கு கூறுகிறேன்.

அருள்புரி மனத்த ராகி யாருயிர்க் கபய
நல்கிப் பொருள்கொலை களவு காமம் பொய்யொடு புறக்கணித்திட்
இருள்புரி வினைகள் சேரா இறைவனது அறத்தை எய்தின்
மருள்செய வருவ துண்டோ வானவ ரின்ப மல்லால்
”8

என்றும்,

ஆதியா யுலகியல்பை யளித்தாய் நீயே
அருந்தவனா யறம்பகர்ந்த அறிவ நீயே
காதியா யுருவினையைக் கடிந்தாய் நீயே
……………”9
என்றும் வருவதைப் பார்க்கலாம்.

மேலும், திருக்கலம்பகம், சிந்தாமணி, பெருங்கதை போன்ற சமண இலக்கியங்களில் இருந்து சான்றுகள் காட்டலாம். விரியும் அதனால் இங்கு சொல்லவில்லை.

மாணவன்: நன்றி ஐயா! அருமையான விளக்கங்கள். சமணப் பற்றி அறிய ஆவல் மேலிடுகிறது. ஐயா, நேரம் போனதே தெரியவில்லை. மற்றொரு நாள் சமணம் பற்றி நீங்கள் விளக்கமாக சொல்லவேண்டும். எனக்கு மட்டுமல்லாமல், நிறைய வலைஞர்களுக்கும் அது மிக உதவியாக இருக்கும்.

ஆசிரியர்: நாம் படிக்கும் காலங்களில்,சைவ, வைணவ நூலகள்தான் பெரிதும் கிடைக்கிறது. சமணர்கள் பார்வை (Jaina View) என்ன என்று தெரியாமல் போய்விடுகிறது. தமிழ்ச் சமணரான திரு.இரா.பானுகுமாரின் வலைப்பதிவு சென்றுப் படித்துப் பார். நிறைய விஷயங்கள் தெரிந்துக் கொள்ளலாம். மற்றொரு நாளில் சந்திப்போம். வணக்கம்!


To be Continued!

--------------------------------------------------------------------------

1. நாலடியார் – 101
2. திருக்குறள் – 319
3. தேவாரம் - சம்பந்தர் –
4. Facets of Saiva Siddhanta – சைவசித்தாந்தம்” ஓர் அறிமுகம் – முனைவர் நல்லூர் சா.சரவணன். (பக்கம்: 1)
5. ,,, (பக்கம்: 25,26)
6. சூளாமணி – 1 – கடவுள் வாழ்த்து
7. திருக்குறள் சமயம் – பக்கம்:31
8. யசோதர காவியம் – 300ஆம் பாட்டு
9. ஜீவசம்போதனை – 27ஆம் பாட்டு

3 comments:

Vassan said...

நன்றி.

Natarajan Nagarethinam said...

பொருளும் நடையும் அருமையாக இருக்கு.

ஆன்மிக சிந்தனைகள் பெருகினால் குற்றங்கள் குறையும். மகிழ்ச்சி அதிகரிக்கும்.

அரகியல்வாதிகள் இதைப் படித்தால் நாடும் மக்களும் பயன்பெறுவார்கள்.

கோவி.கண்ணன் said...

//மேலும், வினைக்கொள்கையில், சைவத்திற்கும், சமணத்திற்கும் ஒரு முக்கிய வேறுபாடு இருக்கிறது. சைவத்தில் சிவபெருமான் தன் ஆணையால் உயிர்களின் வினைப்பயனுக்கு ஏற்ப பிறவி பேதத்தை தருவான் என நம்பப்படுகிறது.5
ஆனால் இதற்கு மாறாக, சமணத்தில் வினைகளை மட்டுறுத்தவென்று யாரும் தேவையில்லை. வினைப்பயன், செய்தவனைத் தானே சென்றடையும். மேலே சொன்ன நாலடியார் பாடல் கூறுவதும் அதுதான். தேவர் பெருமானும் “பிற்பகல் தாமே” என்று கூறுவதால், இங்கே கூறப்படுவதுச் சமண கோட்பாடாகிறது. என்ன புரிகிறதா?

மாணவன்: புரிந்த மாதிரியும் இருக்கிறது. புரியாத மாதிரியும் இருக்கிறது.//

எந்த ஒரு சுழற்சி விசை நிகழ்விற்க்கும் (Cyclic Event) மாறாத புறவிசை தான் காரணமாக அமையும். தண்ணீர் - நீராவி - மேகம் - தண்ணீர் - இந்த சுழற்சிக்கு சூரிய வெப்பம் காரணமாக அமைவது போல்.

சைவ கொள்கைப் படி பிறவி (சுழற்சி) அறுத்தல் இறைநாட்டதால் (புற விசையால்) ஏற்படும் என்று நம்புகிறார்கள். சமண பிறவிக் கொள்கையால் இதை எவ்வாறு மறுப்பீர்கள் ?

:))